மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இவர்களை மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். இந்தாண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. ஆங்கில வழி வகுப்பு களிலும், மாணவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட வில்லை. இதனால் மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம் அடிப்படையில், மாநில அளவில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.
காரணம் என்ன : ஐந்து ஆண்டுகளில், ஏராள மான புதிய தொடக்க பள்ளி துவங்கப்பட்டன. நடுநிலை- உயர்நிலையாகவும், உயர்நிலை- மேல்நிலையாகவும் தரம் உயர்த்தப்பட்டன. அங்கு, அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், புதிய பணியிடம் உருவாக்கப்பட்டன.
இப்பள்ளிகளில், வரும் காலங்களில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு எதிர்பார்த்தது. மாறாக குறைந்ததால் ஆசிரியர் 'சர்பிளஸ்' ஏற்பட்டது. மேலும் ஆங்கில வழி கல்வியிலும் குறைந்தபட்சம், 15 மாணவர் இல்லாத வகுப்புகளின் ஆசிரியர்களும், 'சர்பிளஸ்' பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.