8-வது வகுப்பு வரை மாணவர்களின் கட்டாய தேர்ச்சியை ரத்து செய்யவேண்டும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

மாணவர்களின் கல்வி நலன் கருதி 8-வது வகுப்பு வரை மாணவ-மாணவிகளை கட்டாய பாஸ் செய்யும் முறையை ரத்துசெய்யவேண்டும் என்று தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறியதாவது:-

கட்டாய தேர்ச்சியை கைவிட வேண்டும்

நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளிகளுக்கு விண்ணப்பித்துள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். 3 வருடத்திற்கு ஒரு முறை அங்கீகாரம் புதுப்பிக்கவேண்டியதை 5 வருடமாக நீட்டிக்கவேண்டும்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 8-வது வரை அனைத்து மாணவ-மாணவிகளும் கட்டாயம் தேர்ச்சி செய்து ஆகவேண்டும். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் போய்விட்டது. மாணவர்களுக்கு வாசிக்கக்கூட தெரிவதில்லை. எனவே மாணவர்களின் கல்வி நலன் கருதி 8-வது வகுப்புவரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்யவேண்டும்.


கல்வி கட்டணம்

கட்டாய கல்வி உரிமைசட்டத்தில் பள்ளிக்கூடங்களில் 25 சதவீத ஏழை மாணவர்கள் கல்வி கட்டணம் இன்றி சேர்க்கப்படவேண்டும். அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய கல்வி கட்டணத்தை பள்ளிக்கு அரசு செலுத்தவேண்டும். 

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு 2014-2015-ம் ஆண்டு கல்விக்கடன் பாக்கி ரூ.20 கோடியும், 2015-2016-ம் கல்விக்கடன் பாக்கி ரூ.130 கோடியும் அரசு வழங்க வேண்டும்.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்பாடப்புத்தகத்தை மட்டுமாவது விலை இன்றி தமிழக அரசு வழங்கவேண்டும். பள்ளிக்கூடங்களுக்கு கல்வி கட்டணத்தை ஒரே விதமாக நிர்ணயிக்கவேண்டும். 

இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம்

தரமற்ற சமச்சீர் கல்வியை ரத்துசெய்துவிட்டு சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும். அதாவது இந்தியா அளவில் நடத்தப்படும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வண்ணம் இமயம் முதல் குமரி வரை ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.

11-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு பாடத்திட்டத்தை வளரும் இந்திய சூழலுக்கு ஏற்ப புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தவேண்டும். 

இவ்வாறு நந்தகுமார் தெரிவித்தார்.