புத்தகங்களை இழந்த தனியார் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலம் பெறலாம் தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவிப்பு

சென்னை தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கூறியிருப்பதாவது: சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாடநூல்களை இழந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள், சம்பந்தப் பட்ட துறைத்தலைவர்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாடநூல்களை இழந்திருந்தால் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் ‘www.textbookcorp.in’ என்ற இணையதளம் வழியாக பதிவுசெய்து, வீட்டு முகவரியிலேயே பாடநூல்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தின் வட்டார அலுவலகங்களிலும் போதுமான புத்தகங்கள் உள்ளன. இது தவிர தனியார் பள்ளிகள் கூடுதல் பாடநூல்கள் கோரினால், ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி இணையவழி சேவையை பயன்படுத்தி உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.