சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலி: மே.9-ல் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு

தமிழகத்தில் மே.16-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-ல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வுகள் நடந்த போதே முடிவுற்ற தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தது: விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக, தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 14-ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கிவிட்டது. 

தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் விடைத்தாள்களை திருத்தும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. வேதியியல் உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி வரும் 5-ம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதற்காக, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கடைசியாக நடந்த தேர்வுகளான இயற்பியல் மற்றும் வணிகவியல் பாடங்களின் விடைத் தாள்கள் திருத்தும் பணி 6-ம் தேதி முதல் தொடங்கும். விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட கல்வித்துறை திட்டமிட் டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, பொறியியல் படிப்பு களுக்கு இம்முறை ‘ஆன்-லைனில்’ மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான 15 தினங்களில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை போன்றவை இருக்கும் என்பதால் மே 2-வது வார இறுதியிலோ அல்லது அதற்கு பிறகோ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். 

எனவே, பிரச்சினைகளைத் தவிர்க்க, முன்கூட்டியே பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித்துறை அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மே 9-ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.