பிளஸ் 2 பொதுத்தேர்வை பார்வையிட அண்ணா பல்கலைக்கு அனுமதி

பிளஸ் 2 தேர்வு முறையாக நடத்தப்படுகிறதா; மாணவர்கள் பாடங்களை புரிந்து எழுதுகின்றனரா என்பதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பார்வையிட தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் மற்றும் முதல் மொழி பாட தேர்வில், இரண்டு தாள்களுக்கும், ஆங்கில பாடத்தில் இரண்டு தாள்களுக்கும் தேர்வு முடிந்துள்ளது. முக்கிய பாடங்களுக்கு, மார்ச், 14ல் தேர்வு துவங்க உள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வந்த பின், அண்ணா பல்கலையில் இன்ஜி., கவுன்சிலிங் நடக்கும். இதில், முக்கிய பாடங்களின் மதிப்பெண் தான் கணக்கில் எடுக்கப்பட்டு, மாணவர் சேர்க்கப்படுவர். ஆனால், பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, இன்ஜி., படிப்பில் சேர்ந்து முதல் செமஸ்டரின் பல பாடங்களில் தேர்ச்சி பெறுவதில்லை என்ற புகார் உள்ளது.

அதனால், பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகள் எப்படி நடக்கின்றன; மாணவர்கள் புரிந்து கொண்டு தேர்வை எழுதுகின்றனரா என்பதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பார்வையிட, தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது. இதற்காக, 30 இன்ஜி., கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் அண்ணா பல்கலை தேர்வுத்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.