அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு

வேலூர்:அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதில், 6,௦௦௦க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன.


இவற்றில், மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும், அறிவியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வந்ததாகவும், அதற்கான நிரந்த கட்டடங்கள் இருப்பதாகவும், கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2006ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்திய பின், ௧௦ம் வகுப்பிலும் அறிவியல் செய்முறைகள் அமல்படுத்தப்பட்டது. இதனால், உயர்நிலைப்பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகள் அமைக்க வேண்டியது அவசியமானது என்று, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

கடந்த, 4 ஆண்டுகளில் நுாற்றுக்கணக்கான நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளுக்கு போதிய வகுப்பு அறை கட்டடங்களே, இன்னமும் கட்டப்படாமல் இருந்து வருகிறது.இதனால், அறிவியல் ஆய்வக வசதி என்பது, பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகளில், அரிதாகவே இருந்து வருகிறது. ஒரு சில உயர்நிலைப்பள்ளிகளில், காலி வகுப்பு அறைகளில் தற்காலிக ஆய்வகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளிலும், அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடம் தேவைப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதற்கான அறிக்கையை தயாரித்து, முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.