பிளஸ் 2 கணித தேர்வு:புதிய கேள்விகளால் மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 2 கணித தேர்வில், சில புதிய கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் குழப்பமடைந்தனர்; நீண்ட பதிலளிக்க வேண்டிய கேள்விகளால், நேரமின்றி தவித்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று கணித தேர்வு நடந்தது.

வினாத்தாளில், ஆறு மதிப்பெண்ணுக்கான கட்டாய கேள்விகளில், 46, 47, 52 மற்றும், 55ம் எண் கேள்விகள், இதுவரை முந்தைய தேர்வில் இடம்பெறாத புதிய கேள்விகளாக இருந்தன
மொத்தமுள்ள, 10 பாடங்களில், 8.6வது பிரிவு அல்லது, 8.5வது பிரிவில் இருந்து, 10 மதிப்பெண்களில், ஒரு கேள்வி எதிர்பார்க்கப்படும். இந்த முறை, 8.5வது பிரிவில் இருந்து மட்டும், ஒரு கேள்வி இடம் பெற்று இருந்தது. அதுவும், 'புளூ பிரின்டில்' கூறியுள்ள படி, புத்தகத்திற்கு வெளியே இருந்து சிந்தித்து எழுதும் வகையில் கேட்கப்பட்டதால், மாணவர்கள் சற்று திணறினர்
43வது கேள்வியில், பொருள் மாறாமல், சிந்திக்கும் வகையில் கேள்வியின் வடிவம் மாறியிருந்ததால், மாணவர்கள் தடுமாறினர் ஆறு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில் நீளமாக இருந்ததால், அவற்றை எழுத மாணவர்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டு, நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது. நேற்று நடந்த, பிளஸ் 2 புவியியல் தேர்வும், சற்று கடினமாகவே இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

'சென்டம்' குறையும்!வினாத்தாளில் பிழையோ, குழப்பமோ இல்லை. சில கேள்விகள் மாணவர்களை சிந்தித்து எழுத செய்வதாக இருந்தது. இது வரையிலான தேர்வுகளில் இடம் பெறாத புதிய கேள்விகள், இந்த முறை இடம் பெற்றன. ஒரு மதிப்பெண் கேள்விகள், எளிமையாகவே இருந்தன. தேர்ச்சி பாதிக்காது; 'சென்டம்' வாங்குவோர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
டி.ராஜ், பி.ஏ.கே., பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர், சென்னை,- நமது நிருபர் -