பிளஸ் 2 'பாஸ்' மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு முகாம்

 பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே, வேலைவாய்ப்பு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை செய்துள்ளது.
இது குறித்து, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குனர் கூறியதாவது: கடந்த, 2011 முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை, தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக நேரடியாக இத்துறையின், https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம், ஐந்து ஆண்டுகளில், 35 லட்சம் மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டிற்கான, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வரும், 18ல் வழங்கப்படுகிறது. அன்று முதல் வரும் ஆக., 1ம் தேதி வரை, 15 நாட்களுக்கு ஜூலை, 18ம் தேதி நாளையே பதிவு மூப்பு தேதியாக, மாணவர்கள் படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகமும், பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து செய்துள்ளன. தமிழகத்தில் உள்ள, 3,893 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
மாணவர்கள், 'ஆதார்' அட்டை எண், குடும்ப அட்டை, மொபைல் போன் எண், 'இ - -மெயில்' முகவரி போன்ற விபரங்களை, மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாள் அன்று எடுத்து வர வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும், அனைத்து மாணவர்களும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மெட்ரிக், சி.பி.எஸ்.இ., படித்த மாணவர்களும் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு துறையின், https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில், 'ஆன்-லைன்' மூலம் பதிவு செய்யலாம் அல்லது தங்கள் மாவட்டத்திற்கு உரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.