அரசு பள்ளிகளை சுற்றி நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை

அரசு பள்ளிகளை சுற்றி, மாணவர்கள் உடல்நலனை பாதிக்கும் நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
வறுத்த உணவு, சிப்ஸ், குளிர்பானம், நுாடுல்ஸ், பீட்ஸா, பர்கர், உருளைக்கிழங்கு பிரை, சாக்லேட், சமோசா உள்ளிட்ட கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை அதிகமுள்ள நொறுக்கு தீனி, உணவுகளை, பள்ளி வளாகத்துக்குள்ளும், பள்ளியை சுற்றி, 200 மீட்டர் துாரத்திலும்
விற்பனை செய்யக் கூடாது. இதை, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் செயல்படும் கேன்டீனுக்கு பெற்றோர், ஆசிரியர், மாணவர்களை கொண்ட மேற்பார்வை குழு அமைத்து, ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே மாணவர்களுக்கு கிடைப்பதை கண்காணிக்க வேண்டும். உணவு தயாரிப்பில் தரமான முறையை பின்பற்ற ஆய்வு நடத்த வேண்டும். அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் உடற்கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.வாரத்துக்கு, குறைந்தபட்சம் இரு பாடவேளை, விளையாட்டுக்கு ஒதுக்கி, உடல்திறன் மேம்படும் வகையில் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்த வேண்டும்.
வீடுகளிலும் மாணவர்கள், அதிக நேரம், 'டிவி' பார்ப்பதை தவிர்த்து, உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுகளில் கவனம் செலுத்த அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.