பள்ளி மாணவர்களுக்கு புதிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

புதுடெல்லி 
பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில், ஆன்- லைன் மூலம் மாணவ-மாணவியர் கள் கல்வி சார்ந்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கும், புதிதாக கற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக நேற்று மத்திய அரசு மொபைல் அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய தள வசதிகளை அறிமுகம் செய்து வைத்தது. 
டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதனை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஆன்-லைன் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி சார்ந்த விஷயங்களை தேடி எடுத்துக் கொள்ளும் வகையில், ‘இ-பாடசாலா’ என்ற இணையதளமும், மொபைல் அப்ளிகேஷனயும் அறிமுகம் செய்து வைத்துள்ளோம். பள்ளி கல்வி திட்டத்தில் வெளிப்படைதன்மையை கொண்டு வருவதற்காக மட்டுமின்றி, குழந்தைகள் புதிதாக கற்றுக் கொள்வதற்கான சூழலை உருவாக்கவுமே, இத்தகைய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறோம். மேலும், மாணவர்கள் மீதான தேர்வு சுமையை குறைப்பது குறித்து சில மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தவிர பள்ளிகளில் மதிய உணவு மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து அளிப்பது தொடர்பான திட்டத்தை வகுக்க கமிட்டி அமைத்துள்ளோம். அந்த கமிட்டி வகுத்து கொடுக்கும் ஊட்டச்சத்து திட்டத்தின்படி, அந்தந்த மாநில அரசுகள் சொந்தமாக மதிய உணவுகளை தயாரிக்கும்படியும் வலியுறுத்தப் போகிறோம்’’ என்றார். 
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான ‘சரண்ஷ்’ என்ற மற்றொரு அப்ளி கேஷனும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அப்ளி கேஷன் மூலம் பிற மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில், பாடவாரியாக குழந்தைகளின் கல்வி திறனை பெற்றோர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும். இதே போல் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில், ‘சாலா சித்தி’ என்ற மற்றொரு டிஜிட்டல் தொழில்நுட்பமும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 
-பிடிஐ 
மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் டெல்லியில் நேற்று ‘இ-பாடசாலா’ என்ற மொபைல் அப்ளிகேஷனை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.