சிறுபான்மை மாணவர்கள் மொழிப்பாடத்தை விருப்ப தேர்வாக எழுத அரசு அனுமதி

சென்னை எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் சிறுபான்மை மாணவர்கள் தங்கள் மொழிப்பாடத்தை விருப்ப தேர்வாக எழுத தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு தமிழ் கட்டாய பாட சட்டம் -2006-இன் படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் பகுதி-1-ல் தமிழ்மொழி கட்டாய பாடம் ஆகும். அதேபோல், பகுதி-2-ல் ஆங்கிலமும், பகுதி-3-ல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவையும் கட்டாய பாடங்கள். இந்த நிலையில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் சிறுபான்மை மொழிப்பாடங்கள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதா வது: 2016-ல் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லாத சிறுபான்மை மொழிகளை (அதாவது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, இந்தி, சமஸ்கிருதம், அரபிக், பிரெஞ்சு, குஜராத்தி) தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் பகுதி-4-ல் சிறுபான்மை மொழிப்பாடத்தை ஒரு தேர்வாக எழுதிக்கொள்ள அனுமதிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கு ஒரே தாள் கொண்ட தேர்வு மட்டும் நடத்தப்படும். சிறுபான்மை மொழிப்பாடங்களில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண், தேர்ச்சி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதேநேரத்தில் அந்த மதிப்பெண் விவரம், எஸ்எஸ்எல்சி சான்றிதழில் குறிப்பிடப்படும் என்று கூறியிருக்கிறார். எனவே, பகுதி-4-ல் தேர்வெழுத உள்ள மாணவர்களின் பாட விவரங்களை தயாராக வைத்திருக்குமாறு அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.