அரை ஆண்டு தேர்வு அட்டவணையில் இப்போதைக்கு மாற்றம் இல்லை; பள்ளி கல்வித்துறை இயக்குனர் தகவல்

அரை ஆண்டு தேர்வு அட்டவணையில் இப்போதைக்கு மாற்றம் இல்லை என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு

பள்ளி கல்வி இயக்குனரகம் கடந்த நவம்பர் மாதம் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரை ஆண்டு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, பிளஸ்-2 தேர்வு டிசம்பர் 7-ந் தேதி தொடங்கி டிசம்பர் 22-ந் தேதி முடிவடையும் என்றும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு டிசம்பர் 9-ந் தேதி தொடங்கி டிசம்பர் 21-ந் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக அரை ஆண்டு தேர்வு ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேதியில் இருந்து தள்ளி வைக்கப்படலாம் என மாணவ-மாணவிகளிடையே எதிர்பார்ப்பு இருந்தது.

இப்போதைக்கு மாற்றம் இல்லை

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தான் கனமழை பெய்துள்ளது. எனவே, இப்போதைக்கு அரை ஆண்டு தேர்வு கால அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி தேர்வு நடைபெறும். 

ஆனால், இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, இந்த 3 நாட்களுக்கு பிறகு அரை ஆண்டு தேர்வு நடைபெறும் அட்டவணையில் மாற்றம் உண்டா? இல்லையா? என்பது தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.