ஆசிரியர் பணியில் உள்ள பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளின் சம்பளப்பணத்தில் வருமான வரித்துறையினர் வரி வசூலிக்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,
சுற்றறிக்கை

சென்னை ஐகோர்ட்டில், கோவை நிர்மலா கல்விச் சங்கம், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி (ரோமன் கத்தோலிக்க நிறுவனங்கள்) சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கோவை நிர்மலா கல்விச் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்கள் சங்கம் சார்பில் மகளிர் கல்லூரி நடத்தப்படுகிறது. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்யத் தேவையில்லை. இதுதொடர்பாக வருமான வரித்துறை கடந்த 1944-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி சுற்றறிக்கை வெளியிட்டது.


வருமானம் அல்ல

ஏனென்றால், அவர்கள் பெறும் சம்பளத்தை அவர்களின் சொந்த வருமானமாகக் கருதமுடியாது. அவை அவர்களின் கிறிஸ்தவ அமைப்புக்கானதாக உள்ளதால் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை அவர்களின் வருமானமாகக் கருத முடியாது.

இந்த சூழ்நிலையில், 28-9-15 அன்று முதன்மை தலைமை வருமான வரித்துறை ஆணையருக்கு சம்பள பட்டுவாடா அதிகாரி கடிதம் ஒன்றை எழுதினார். அதில், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளத்தில் வருமான வரியை வசூலிக்க முடியுமா?, முடியாதா? என்பது குறித்து விளக்கம் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

தடை வேண்டும்

இதற்கு பதில் அளித்த ஆணையர், வருமான வரிச்சட்டப்பிரிவு 10-ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டும் வருமானவரி விலக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் கன்னியாஸ்திரிகள் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விதியின்படி, அவர்களின் சம்பளத்தில் வருமானவரி பிடித்தம் செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வருமானவரிச் சட்டத்தின் 119-ம் பிரிவுக்கு முரணாக உள்ளது. 

வருமானவரித்துறை ஆணையரின் கடிதத்தின் அடிப்படையில் சார் கருவூல அலுவலர்களுக்கு கருவூலத்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி, வருமானவரி பிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலை நீடிக்கும்

இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். இந்த விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்கவேண்டும் என்று கூறி, வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.