பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழில் நிரந்தர பதிவு எண்ணுடன் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. போலி மதிப்பெண் சான்றிதழ்
தயாரிப்பதை தடுக்கும் வகையில், பார்கோடு குறியீட்டுடன் நிரந்தர பதிவு எண் கொண்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும், என கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன்படி, தற்போது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2015ல் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் பச்சை நிறத்தில் இருந்தன. தற்போது சிவப்பு நிற எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதே போல் பதிவு எண், வரிசை எண் மாற்றப்பட்டு நிரந்தர பதிவு எண் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர பதிவு எண் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்களிலும் இடம்பெறும்.
அதே போல் இந்த மதிப்பெண் சான்றிதழில் இரண்டு வகையான பார்கோடுகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், சிறப்பு பிரிவினருக்கு பச்சை நிறத்தினாலான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. சலுகைகள் பெற வசதியாக சான்றிதழில் மாற்றுத்திறனாளிகள், சிறப்பு பிரிவினர் என, குறிக்கப்பட்டுள்ளது.