மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமல்

புதுடெல்லி - மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 6 முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இதில் கடைசியாக வழங்கப்பட்ட 6 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அதிகபட்ச சம்பள உயர்வை மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அளித்தன. இந்நிலையில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி கட்டத்தில் 7 வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் தனது பரிந்துரைகளை கடந்த ஆண்டு மத்திய அரசிடம் ஒப்படைத்தது. அதன்படி இந்த பரிந்துரைகள் 2015 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கமிஷன் பரிந்துரைகளை ஆய்வு செய்ய கேபினட் செயலர் பி.கே.சின்கா தலைமையில் செயலர்கள் குழு கடந்த ஜனவரி மாதம் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி நேற்று கூட 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் குறித்து இறுதி முடிவு எடுத்தது.
இதைதொடர்ந்து செயலர் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். இந்த அரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். ஆகஸ்ட் 1 முதல் சம்பள உயர்வு அமல்படுத்தப்படும். ஜனவரி 2016 முதல் ஆகஸ்ட் வரையிலான நிலுவை தொகை ஒரே தவணையில் வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் ஆகவும், அதிக பட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரமாகவும் நிர்ணயித்து செயலர்கள் குழு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.