அங்கீகாரமற்ற 746 பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கு வரும் ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.
மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் கிடையாது. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி கடந்த மே 31-ம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக்கூட இப்பள்ளிகள் கடைபிடிக்கவில்லை. முறையற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாலேயே கும்பகோணம் பள்ளி விபத்தில் இளம் குழந்தைகளை இழந்தோம்.
இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழக அரசு முறையாக கடைபிடிக்கவில்லை. இந்த 746 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் மே 31-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகளை மூட கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முன்வரவில்லை. இதனால் இப்பள்ளிகளில் பயிலும் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மீண்டும் இதே பள்ளியில் படிப்பைத் தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
2 மாதம் போதிய அவகாசம் இருந்தும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழுவும், இன்னும் அறிக்கையை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வருவது அங்கீகாரமற்ற பள்ளிகளுக்கு தமிழக அரசும் ஆதரவாக செயல்படுகிறதோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அங்கீகாரமற்ற அந்த 746 பள்ளிகள் குறித்த தகவலை உடனடியாக இணையத்தில் வெளியிட்டு, அங்கு பயிலும் மாணவர்களை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் நாராயணன் ஆஜராகி தனது கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன், ‘‘ இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க ஏற்கெனவே ஜூன் 30 வரை தனி நீதிபதி காலஅவகாசம் கொடுத்துள்ளார். எனவே ஜூன் 30 வரை இப்பள்ளிகளுக்கு தற்காலிக காலநீட்டிப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த 746 பள்ளிகளிலும் சுமார் 5 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். எனவே இந்த விஷயத்தில் அவசர கதியில் முடிவெடுத்தால், அந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘ஒரு பிரச்சனைக்கு இயந்திர கதியில் தீர்வு காண முடியாது. 5 லட்சம் மாணவர்களின் நலன் தொடர்பான பிரச்சினை இது. எனவே இது தொடர்பாக தமிழக அரசு குறைபாடுகளைக் களைய உரிய தேதிக்கு முன்பாகவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.