தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு பல ஆண்டுகளாக உதவித்தொகை இல்லை

சிவகங்கை, :தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தவிக்கின்றனர்.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு நடத்தி உதவித்தொகை வழங்குகிறது. இத்தேர்வை எழுத 7 ம் வகுப்பில் எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள், மற்றவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 8 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை வழங்குவதற்காக மாணவர்களிடம் வங்கி சேமிப்பு கணக்கு எண் பெறப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் உதவித்தொகை கிடைக்காதோர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலையும், அவர்களது சேமிப்பு கணக்கு எண்ணையும் அனுப்பி விடுவோம். அவர்கள் நேரடியாக மாணவர்கள் கணக்கில் உதவித்தொகைக்குரிய பணத்தை செலுத்திவிடுவர். உதவித்தொகை வரவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, என்றார்.