விடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு பட்டியல் அரசு தேர்வுத்துறை வெளியிட கோரிக்கை

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., போல், விடை குறிப்பு மற்றும் திருத்த முறையை வெளியிட வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற அமைப்பான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களால் முன்னுரிமை கொடுத்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், 15 லட்சம் பேர், 10ம் வகுப்பு; 13 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வை எழுதி தேர்ச்சி பெறுகின்றனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ் 2வில், 8 லட்சம் பேர்; 10ம் வகுப்பில் 10 லட்சம் பேர் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தில் பொதுத் தேர்வு திருத்த முறைகளில் பல சர்ச்சைகள் ஏற்படுவது உண்டு. சரியான விடை எழுதிய பலருக்கு, உரிய மதிப்பெண் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுகிறது.
* பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் முறை என்ன?
* அதற்கான தேர்வுத்துறையின் விதிகள் என்ன?
* விடைக்குறிப்பு சரியாக தயாரிக்கப்படுகிறதா? 
* அதில் உள்ளது போல், மதிப்பெண் வழங்கப்படுகிறதா போன்ற பல கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைப்பதில்லை. வெளிப்படைத்தன்மை இல்லாமல், தமிழக அரசு தேர்வுத்துறையின் செயல்பாடு உள்ளதாக, பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.
எனவே, சி.பி.எஸ்.இ., போல், விடைக்குறிப்பு, மதிப்பெண் முறை மற்றும் விடைத் திருத்த முறை குறித்த விதிமுறைகளை வெளியிட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, விடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு போன்ற விவரங்களை, சி.பி.எஸ்.இ., தரப்பில், பொதுவான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பார்த்து மாணவரும், பெற்றோரும் தங்கள் விடைத்தாள் சரியாக திருத்தப்பட்டுள்ளதா என பார்த்து, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
தமிழகத்தில் மறு மதிப்பீட்டுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், விடைக்குறிப்பு மற்றும் திருத்த முறை என்னவென்றே தெரியாத நிலையில், மீண்டும் அதிக கட்டணம் செலுத்தி, மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என, தேர்வுத்துறைக்கு
கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.