சம்பளம் வழங்கக்கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்

மருத்துவ விடுப்பு நாட்களை பணி நாட்களாக கருதி எட்டு மாதம் சம்பளம் வழங்க கோரி, தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன் பள்ளி தலைமை ஆசிரியை மகனுடன் உண்ணாவிரதம் இருந்தார்.தேனி மாவட்டம், போடி ஒன்றியம், கூழையனுார் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம்,46. இதற்கு முன் இவர் குண்டல்நாயக்கன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார். கடந்த ஆகஸ்ட்டில் இவரை மாவட்ட கல்வி நிர்வாகம் மலைப்பகுதியான அகமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணிமாறுதல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை ஆசிரியை கற்பகம் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.


கோர்ட் உத்தரவுப்படி, அவர் போடி ஒன்றியம் கூழையனுார் அரசு நடுநிலைப்பள்ளியில் 2016 ஏப். 20ல் பணியில் சேர்ந்தார். இதற்கிடையில் மருத்துவ விடுப்பில் இருந்த 8 மாதத்தை தனது பணி நாட்களாக கருதி, அதற்குரிய சம்பளம் வழங்க மாவட்ட கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தார். இதை கண்டு கொள்ளாததால், நேற்று தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு வந்த கற்பகம் மகன் பாலசபரியுடன் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.

தலைமை ஆசிரியை, “ மலைப்பகுதியில் உள்ள பள்ளிக்கு பணிமாறுதலை தொடர்ந்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். கோர்ட் உத்தரவுப்படி, கடந்த மாதம் கூழையனுார் அரசு நடுநிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்தேன். 8 மாதம் மருத்துவ விடுப்பில் இருந்ததற்கு உரிய சம்பளம் வழங்ககோரி பலமுறை பள்ளி கல்வித்துறையில் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. இதனால், மகனுடன் உண்ணாவிரதம் உள்ளேன். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு இல்லை. மாலையில் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்” என்றார்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பவுன்,“ தலைமை ஆசிரியை மருத்துவ விடுப்பு நாட்களை பணி நாளாக கருதி சம்பளம் வழங்க கோரினார். கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.